பெகாசஸ் உளவு விவகாரம்.. மோடி அரசு செய்தது தேசதுரோகம்.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்
டெல்லி: இஸ்ரேலிடம் இருந்து பெறப்பட்ட பெகாசஸ் மென்பொருளை கொண்டு அரசியல்வாதிகள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதில் மத்திய அரசு தேசதுரோகம் இழைத்துவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், பல பிரபலங்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.

இஸ்ரேல்
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அரசு இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை விலை கொடுத்து வாங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் பிரதமர் மோடி 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற போது அந்த பயணத்தில் இந்த மென்பொருளை வாங்கி இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மழைக்கால கூட்டத் தொடர்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு பெகாசஸ் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நாளை மத்திய பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த கட்டுரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்கள்
இந்திய மக்களின் வரிப் பணத்தின் மூலம் இந்தியர்களை உளவு பார்க்க இந்த மென்பொருள் வாங்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியாவில் அரசியல்வாதிகள், பொதுமக்கள், முக்கிய ஜனநாயக நிறுவனங்களை உளவு பார்க்க மோடி அரசு பெகாசஸை வாங்கியுள்ளது.

ராகுல் ட்வீட்
எதிர்க்கட்சித் தலைவர்கள். ஆயுத படை அதிகாரிகள், நீதித் துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை குறி வைத்து போன் ஒட்டுகேட்பு நடந்துள்ளது. இது உண்மையில் தேசதுரோகம். மோடி அரசு தேசதுரோகத்தை இழைத்துவிட்டது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications