ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.. மோடி அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் அதிரடி
டெல்லி: 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கும் நிலையில், அவரை மக்களவையில் இருந்தே தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு இந்த பெயர் கொண்டவர்கள் எல்லாம் என்று கூறி பொதுவான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மோடி குறித்து அவதூறு பேச்சு
அவரது இந்த பேச்சு அந்த சமயத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது அவதூறாக பேசியதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

சூரத் நீதிமன்றத்தில் விசாரணை
சுமார் 4 ஆண்டுகளாக ராகுல் காந்தி மீதான இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா அமர்வில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை
வழக்கை விசாரித்த சூரத் நீதிபதி வர்மா மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்தார். இதனை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கினார்.

ராகுல் காந்தி கருத்து
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். கூட்டணி கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே என்னுடைய மதம். உண்மையே என் கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை." என குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடியபோது அதில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். ஆனால், அவர் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவரது வயநாடு எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்து உள்ளார். அவர் மீதான நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications