நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான டோனை எடுக்கும் ராகுல் காந்தி! குவியும் விமர்சனங்கள்
டெல்லி: மத்திய அரசின் மீதான ராகுல் காந்தியின் விமர்சனங்கள் தற்போது இந்திய அரசின் மீதான விமர்சனங்களாக மாறியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
சமீபத்தில் அவர் பேசும்போது, தன்னுடைய போராட்டம் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிரானதாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ராகுல் காந்தி பேசியது என்ன?:
மத்தியில் ஆளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக ராகுல் காந்தி தீவிரமாக விமர்சித்து வருகிறார். கடந்த 2014க்கு பிறகு காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை பிடிக்க முயன்றாலும், அக்கட்சியால் முடியவில்லை. இருப்பினும், மத்திய அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை அவர் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவரது விமர்சனங்கள் தற்போது திசைமாறி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது விமர்சனங்கள் மாவோயிஸ்ட் அமைப்பினரின் குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப்போகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பும் ராகுலும்:
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி கையில், இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் நகலை ஏந்தியிருந்தார். இது பெரும் கவனம் பெற்றிருந்தது. ஆனால் ராகுல் காந்தி பேசிய விஷயங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அதாவது, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 12, இந்தியா என்பதை ஒரு நாடு என்று கூறகிறது. ஆனால் ராகுல் காந்தி இந்தியாவை ஒரு நாடு என்றே கூறுவது கிடையாது. இந்தியாவை பல மாநிலங்களின் தொகுப்பு என்றே அவர் கூறு வருகிறார்.
இது நாம் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவை துண்டாடுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல ராகுல் காந்தியின் கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் இப்படி செய்யலாமா?:
ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஒரு பதவியில் இருந்துக்கொண்டு, அதற்கு எதிராகவே பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. நாட்டின் கொடி, சட்டம் உள்ளிட்டவை இந்தியாவை ஒரு நாடாக அங்கீகரிக்கிறது. ஆனால், ராகுல் காந்தி, இந்தியா என்பது ஒரு நாடே கிடையாது மாநிலங்களின் தொகுப்புதான் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கூட அவர் இதுபோன்று பேசியிருக்கிறார். ஆனால், இனியும் இப்படி பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று கேட்கின்றனர்.
அவர் இந்திய அரசுக்கு எதிரான போரை அறிவித்திருக்கிறார். இதன் மூலம் லோக்சபா தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை இந்திய அரசியலமைப்பின் அமைப்புகளுக்கு எதிராக ராகுல் காந்தி போரை அறிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர் மட்டும் அவர் அரசமைப்பை மதித்தாரா என்ன? கடந்த 2013ம் ஆண்டு டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் அரசாணையை கிழித்து எறிந்தார். அது ஒன்றே அவர் எந்த அளவுக்கு அரசமைப்பை மதிக்கிறார் என்பதற்கு உதாரணம். அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் சென்றால் அங்கு அவர் பேசும் பேச்சு இந்தியாவின் பிம்பத்தை உடைக்கும் விதமாக இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது ராகுல் காந்தியின் பேச்சுகளுக்கு அவர்கள் பதில்களையும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications