மோடி ஃபிக்சிங் செய்கிறார்.. நேர்மையாக தேர்தல் நடந்தால் பாஜக 180 தொகுதிகளை தாண்டாது - ராகுல் தடாலடி
டெல்லி: தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேட்ச் ஃபிக்சிங் மூலம் வெற்றி பெற நினைக்கிறார் என்றும், பாஜக நியாயமாக தேர்தலை சந்தித்தால் 180 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும், எதிர்க்கட்சிகள் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதாவது, "தேர்தல் களத்தில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றிபெற நினைக்கிறார். மேட்ச் பிக்சிங் மூலம் பாஜக வெற்றி பெறும்போது நமது அரசியலமைப்பு முடிவுக்கு வந்துவிடும். எங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. 6 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அப்போதே செய்திருக்க வேண்டியதுதானே. தேர்தலுக்கு முன்பாவது செய்திருக்கலாமே..
இரண்டு முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பாஜக ஒருவேளை வெற்றி பெற்று அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால், நாடு முழுவதும் தீ பற்றி எரியும். இந்த தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்.
இந்த தேர்தலை பாஜக நியாயமாக சந்தித்தால் 180 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெறும். தேர்தலில் எதிர்க்கட்சியினரை போட்டியிடாமல் இருக்க வைப்பதே பாஜகவின் திட்டம்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர்தான் கைது செய்யப்பட்டார். ஆனால், கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கும்போதே அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சர் யாரும் இதற்கு முன்னர் இப்படி கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலிருந்தும் விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications