"நீங்க ஒன்றும் இந்தியா இல்லை.. பாஜக பீதியில் பதறி கொண்டு இருக்கிறது!" ராகுல் காந்தி சொன்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்துப் பேசிய ராகுல் காந்தி, பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். பீதியில் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாஜகவினர் தங்களைத் தான் ஒட்டுமொத்த இந்தியா என நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றும் அது உண்மை இல்லை என்றும் சாடினார்.
மத்திய அரசு மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.. எப்படியாவது பாஜக இந்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஆதரவு தருகிறது.

அதேநேரம் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கிறது. "தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக் கூடாது" என்பது முக்கிய வாதமாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
நேற்றைய தினம் பிரதமர் மோடி தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்துப் பேசிய நிலையில், இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்துப் பேசினார். அப்போது அவர் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாகப் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் மசோதாக்களால் தேசம் தாக்கப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்ற ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்று தெரிந்தும் பீதியில் பாஜக அரசு இதைக் கொண்டு வந்துள்ளது என்றும் விமர்சித்தார்.
மேலும் அவர், "பாஜகவினர் தங்களை ராணுவம் என்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள்.. ஆனால், நீங்கள் ராணுவமும் இல்லை.. ஒட்டுமொத்த இந்தியாவும் இல்லை.. நமது பாதுகாப்புப் படை வேறு.. நமத நாட்டு மக்கள் வேறு.. நீங்கள் சாதாரண ஒரு அரசியல் கட்சி மட்டுமே. நாங்கள் இந்திய மக்களை எதிர்க்கவில்லை.. பாஜக என்ற அரசியல் கட்சியைத் தான் எதிர்க்கிறோம்" என்றார்.













Click it and Unblock the Notifications