காங்கிரஸ் ஆட்சியில் மக்களிடம் பெறப்பட்ட வரி 24%.. பாஜக ஆட்சியில் 48%.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களை விட பொதுமக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வசூலிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அண்மையில் கூட்டியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் வரி விதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'மக்களிடம் இருந்து அதிக வரியை வசூலியுங்கள்; கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை குறையுங்கள்' என்பதே மத்திய பாஜக அரசின் கொள்கையாக உள்ளது. உதாரணமாக, கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட வரி 40 சதவீதமாகவும், மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரி 24 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், 2021-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் வரி 24 சதவீதமாக குறைந்தவிட்டது. அதே சமயத்தில், மக்களிடம் இருந்து பெறப்படும் 48 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இவ்வாறு அதில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதனிடையே, ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில், "பொய்யான புள்ளிவிவரங்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்துவதே ராகுல் காந்தியின் வேலையாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நேரடி வரி மட்டுமல்லாமல் மறைமுக வரி, கலால் வரி, சுங்க வரி, செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் பெறப்படுகின்றன. கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பெறப்பட்ட வரி 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல, தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாயும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், 2013-14-ம் நிதியாண்டில் 5.7 கோடியாக இருந்த வரி செலுத்துபவர்கள், 2021-22-ம் நிதியாண்டில் 9 கோடியாக அதிகரித்து விட்டனர். கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அமித் மால்வியா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications