"பாஜகவுக்கு தோல்வி உறுதி.." தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. ஆவேசமாக சாடும் ராகுல்
டெல்லி: உபி மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸின் ராகுல் காந்தி, பாஜக ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு இதுவே சாட்சி என விமர்சித்துள்ளார்.
நம் நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் 4ஆம் கட்ட தேர்தல் கடந்த மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

8 முறை பாஜகவுக்கு வாக்கு: அப்போது உத்தரப் பிரதேசம் ஃபரூகாபாத் லோக்சபா தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இளைஞர் ஒருவரே 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே எடுத்துள்ள நிலையில், அது இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அகிலேஷ் யாதவ்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லையெனில் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி: அதேபோல அகிலேஷ் யாதவின் ட்வீட்டை ரிட்வீட் செய்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் இந்தச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை பாஜக உணர்ந்துவிட்டது. இதனால் அரசு இயந்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை நாசம் செய்ய பாஜக நினைக்கிறது.
தேர்தல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், அதிகார அழுத்தத்திற்குப் பணிந்து அரசியல் சாசனப் பொறுப்பை மறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன், அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் முன் யாராக இருந்தாலும் 10 முறை யோசிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
நடவடிக்கை: இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டான நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையர் தனது ட்விட்டரில், "இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க ச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக 80 எம்பி சீட்களை கொண்ட மாநிலமாக உபி இருக்கும் நிலையில், அங்குப் போட்டி கடுமையாக இருக்கிறது. ஒரு பக்கம் பாஜகவின் என்டிஏ கூட்டணி போட்டியிடும் நிலையில், அவர்களை எதிர்த்து இந்தியா கூட்டணி களமிறங்குகிறது. இது தவிர பகுஜுன் சமாஜ் கட்சி அங்குத் தனித்துக் களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications