'நாம் தடுப்பூசிக்கு போராடுகிறோம்.. அவர்கள் ப்ளூ டிக் வசதிக்கு சண்டையிடுகிறார்கள்..' விளாசும் ராகுல்
டெல்லி: தேசமே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகத் திண்டாடி வரும் நிலையில், மத்திய அரசு ப்ளூ டிக் வெரிபிகேஷனுக்காக சண்டையிட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டிருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியது.
தற்போது தான் கொரோனா பாதிப்பு நாட்டில் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1.14 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 2,667 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது நாட்டில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதனால், பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ராகுல் விமர்சனம்
நாட்டில் கொரோனா பரவலை மத்திய அரசு மிக மோசமாகக் கையாண்டதாகக் காங்கிரஸின் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ராகுல் தனது ட்விட்டரில், மோடி அரசு ப்ளூ டிக் வெரிபிகேஷனுக்காக சண்டையிட்டு வருகிறது. நமக்குத் தேவையான தடுப்பூசிகளை நாமே தான் பார்த்துக் கொள்ள வேண்டும் போல.. #Priorities" என்று ராகுல் விமர்சித்துள்ளார்.

ப்ளூ டிக் விவகாரம்
முன்னதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் வசதி நீக்கப்பட்டது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக Ban twitter என்ற ஹேஸ்டேக்கும் உருவாக்கப்பட்டு டிரெண்டு செய்யப்பட்டது. எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், இருவரின் கணக்குகளுக்கும் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
|
ட்விட்டர் விளக்கம்
புதிய டிஜிட்டல் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் மோதல் நிலவி வரும் நிலையில், இது பெரும் சர்ச்சையானது. இருப்பினும், கடந்த 6 மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு முறைகூட ட்விட்டர் தளத்தில் லாகின் செய்யாத கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டதாகவும் பிறகு கணக்குகளை manualஆக சரி பார்த்த பிறகு மீண்டும் ப்ளூ டிக் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications