அன்னிய நேரடி முதலீட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசுக்கு ராகுல் காந்தி நன்றி
டெல்லி: இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நன்றி கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பை பயன்படுத்தி இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்த முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை சீனாவின் மத்திய வங்கி வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடந்த 12-ஆம் தேதி ராகுல் காந்தி ட்விட்டர் ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை கைப்பற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்திய பெரும் நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் அன்னிய நேரடி முதலீடு செய்ய இந்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதாகும். இதன் மூலம் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கைப்பற்றுவதை தடுக்க முடியும் என்பதாகும்.

இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி பதிவு செய்த ட்வீட்டை மேற்கோள் காட்டி ராகுல் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் என்னுடைய எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றிக் கூறிக் கொள்கிறேன். அது போல் அன்னிய நேரடி முதலீடுகள் அனைத்திற்கு இந்திய அரசின் அனுமதி தேவை என அறிவித்தமைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications