ராகுல் விசாரணை, அக்னிபாத்துக்கு எதிர்ப்பு- டெல்லி ஜந்தர் மந்தரில் காங். சத்யாகிரகப் போராட்டம்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்துவதற்கும், மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று காங்கிரஸ் தலைவர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது அமலாக்கப் பிரிவின் வழக்கு. இவ்வழக்கில் ராகுல் காந்தியிடம் கடந்த வாரம் 3 நாட்கள் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு.

டெல்லியில் ராகுல் காந்தியிடம் முதல் நாளில் 10 மணிநேரமும் அடுத்த நாள் 12 மணிநேரமும் 3-வது நாள் 8 மணிநேரமும் விசாரணை நடத்தியது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் சோனியா காந்தியை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் அமலாக்கப் பிரிவிடம் அவகாசம் கேட்டிருந்தார் ராகுல். இதையடுத்து இன்று காலை ராகுல் காந்தி 4-வது நாளாக டெல்லி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராகுல் காந்தியை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினர். இதனால் தலைநகர் டெல்லியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராகுலிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவும், அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த சத்யாகிரகப் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications