ராகுலின் ஜோடா யாத்திரையால் கட்சியில் புத்துணர்ச்சி.. பாஜக திணறுகிறது.. ஹேப்பி மோடில் ஜெய்ராம் ரமேஷ்!
டெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை கட்சியினர் மத்தியில் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது என்றும் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து பாஜக திணறுகிறது என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோமீட்டர் துரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
ராகுல் காந்தி தேடுவது கடவுளையா? பிரச்சனையா?.. நடிகை கஸ்தூரிக்கு வந்த திடீர் ‛டவுட்’! சுளீர் கேள்வி
ராகுல் காந்தி நடைபயணம்
வருகிற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் களத்தை குறிவைத்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார் ஆகியோர் ஒரு புறம் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல் காந்தியின் நடைபயணம் மூலம் பாஜகவுக்கு நிகரான எதிர்க்கட்சி காங்கிரஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
மக்கள் மத்தியில் வரவேற்பு
இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சியினர் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை கட்சியினர் மத்தியில் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து பாஜக கலங்கியுள்ளது.
வலுவான காங்கிரஸ்
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வலுவான காங்கிரஸ் அவசியம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்திலும் இந்த யாத்திரை நடைபெறுகிறது. எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது காங்கிரஸை பலவீனப்படுத்துவது அல்ல. எங்களை (காங்கிரஸ்) மேலும் பலவீனப்படுத்திக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை கூட்டணி கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எங்களை மேலும் வலுப்படுத்திக்கொள்வோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வலுவான காங்கிரஸ் முக்கிய தூணாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே..
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே அது நடைபெறுகிறது. இந்த யாத்திரையால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் நல்ல முடிவு கிடைத்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், கட்சி அமைப்பை வலுப்படுத்துவதே எங்கள் முன்னுரிமையாகும். காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியம் ஆகும்.