இலங்கை போலீஸ் திடீர் விசாரணை-வீடு திரும்பிய ராஜீவ் காந்தி கொலையாளிகள் ராபர்ட், முருகன், ஜெயக்குமார்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளான ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று கொழும்பு சென்றடைந்தனர். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை போலீசார் 3 பேரிடமும் திடீரென விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணைக்குப் பின் 3 பேரும் வீடு திரும்பினர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தமிழ்நாட்டில் 33 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தனர் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் . முதலில் தூக்கு தண்டனை கைதிகளாகவும் பின்னர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு சட்டப் போராட்டங்கள், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள், தமிழக மக்களின் போராட்டங்கள், செங்கொடி உள்ளிட்டோரின் தீக்குளிப்பு ஆகியவற்றால் ராஜீவ் கொலையாளிகள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான ராஜீவ் கொலையாளிகளில் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதனால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரி 3 பேரும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் முடிவாக நேற்று 3 பேரும் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை தலைநகர் கொழும்பை 3 பேரும் வந்தடைந்த நிலையில் அங்கு திடீரென போலீசார் 3 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதனால் கொழும்பு விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் உறவினர்களும் விமான நிலையத்திற்கு வந்து அவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications