ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் போல நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையா? நவ.11-க்கு விசாரணை ஒத்திவைப்பு!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை போல தங்களை விடுதலை செய்யக் கோரும் நளினி உள்ளிட்ட 6 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 தமிழருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது.

பேரறிவாளன் வழக்கு
கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

தமிழக அரசு தீர்மானம்
அதேநேரத்தில் பேரறிவாளன் உள்லிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

பேரறிவாளன் விடுதலை
பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 தமிழரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் நளினி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு பரோல் அனுமதி வழங்கி உள்ளது.

6 தமிழர் வழக்கு நவ.11-க்கு ஒத்திவைப்பு
இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 11-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications