பேரறிவாளன்போல் விடுதலை ஆவார்களா நளினி, ரவிச்சந்திரன்? மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். அவருடன் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரறிவாளன் பாணியில்... இடைக்கால ஜாமீன், விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்!
தண்டனை
அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
பேரறிவாளன் விடுதலை
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
நளினி, ரவிச்சந்திரன் மனு
இந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 142 வது சட்டப்பிரிவின் மூலமாக தங்களையும் விடுதலை செய்யவும், பேரறிவாளனை போன்று தங்களையும் ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இந்த நிலையில் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரது மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.