"சீதையை சந்தேகப்பட்ட சுயநலவாதிகள்.." அயோத்தியில் பாஜக தோல்வி! மக்களை திட்டி தீர்க்கும் ராமாயண நடிகர்
டெல்லி: லோக்சபா தேர்தலில் அயோத்தி உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்திருந்த நிலையில், ராமாயணம் தொடரில் நடித்த சுனில் லஹ்ரி அப்பகுதி மக்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நமது நாட்டின் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பலருக்கும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் கடந்த இரண்டு முறை உபி-இல் பாஜக மிக பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை அங்கு அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை.

குறிப்பாக அயோத்தி உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்திருந்திருந்து. இதற்கிடையே ராமாயணம் தொடரில் நடித்த சுனில் லஹ்ரி அப்பகுதி மக்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ராமாயணம்: 1980, 1990களில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடருக்கு அப்போது நாடு முழுக்க மிகப் பெரியளவில் ரசிகர்கள் இருந்தார்கள். கொரோனா சமயத்தில் கூட இந்த ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொடரில் ஸ்ரீ ராமராக அருண் கோவிலும், சீதையாக தீபிகா சிகாலியாவும், தம்பி லட்சுமணனாக சுனில் லஹ்ரியும் நடித்து இருந்தார்கள்.
இதில் லட்சுமணனாக சுனில் லஹ்ரி தான் அயோத்தி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் போனதற்கு அவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது.. பிரதமர் மோடி இதற்காக விரதம் இருந்து சிறப்புப் பூஜைகளையும் மேற்கொண்டு இருந்தார்..
தோல்வி: இருப்பினும், லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதி தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. அயோத்தி கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் லல்லு சிங், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத்திடம் படுதோல்வியடைந்தார்.
இதற்கிடையே ராமாயணம் நடிகர் சுனில் லஹ்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அயோத்தி மக்களைச் சுயநலவாதிகள் என்று விமர்சித்த சுனில் லஹ்ரி , அயோத்தி மக்கள் தங்கள் மன்னருக்குத் துரோகம் செய்துவிட்டதாகச் சாடியுள்ளார்.
மக்களைத் திட்டும் நடிகர்: இது தொடர்பாக இந்தியில் அவர், "இதே அயோத்தி மக்கள்தான் சீதா தேவி நாடு திரும்பிய பிறகு சந்தேகப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். கடவுளைக் கூட மறுப்பவர்களை என்னவென்று அழைப்பது? சுயநலவாதி தான்... அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்குத் துரோகம் செய்துள்ளனர்.. இது வரலாற்றில் நிலைத்து இருக்கும்.. இது அயோத்தி மக்களுக்கு அவமானம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல லஹ்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவில், "அயோத்தி குடிமக்களே, சீதா தேவியைக் கூட விட்டுவைக்காத உங்கள் மகத்துவத்தை நாங்கள் வணங்குகிறோம். சிறிய கூடாரத்திலிருந்து ராமர் வெளியே வந்து அழகான கோவிலில் நிறுவப்படுவதை உறுதி செய்த மனிதருக்கு நீங்கள் துரோகம் செய்ததில் நாங்கள் அதிர்ச்சியடையவில்லை. ஒட்டுமொத்த தேசமும் இனி உங்களை மரியாதையுடன் பார்க்காது" என்று சாடியுள்ளார்.
அருண் கோவில் வெற்றி: அதேபோல இதே தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அவர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுனிதா வர்மாவை எதிர்த்து 10,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அருண் கோவிலுக்கு லஹ்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து லஹ்ரி வெளியிட்ட வீடியோவில், "எனக்கு பிடித்தமான இரண்டு பேர் தேர்தலில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், கங்கனா ரணாவத். பெண்களின் பவராக உருவெடுக்கும் அவர், மண்டியில் (இமாச்சலப் பிரதேசம்) வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவதாக, மீரட்டில் இருந்து வெற்றி பெற்ற எனது மூத்த சகோதரர் அருண் கோவில். இருவருக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications