9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட போவதாக சோசியல் மீடியாவில் பரவிய புரளி.. ரிசர்வ் வங்கி மறுப்பு
டெல்லி: 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டூத்தீயாக வதந்தி பரவி வந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, எந்த ஒரு வங்கியும் மூடப்போவதில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
கார்ப்பரேசன் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, ஆந்திரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி, யுனைட்டேட் பேங்க் ஆப் இந்தியா என 9 வங்கிகளை ரிசர்வ் வங்கி மூடப்போவதாக வடமாநிலங்களில் சமூக வலைதளங்களில் காட்டூத்தீயாக தகவல்கள் பரவியது.
பஞ்சாப் மகாராஷ்ட்டிரா கூட்டுறவு வங்கி (pmc) முறைகேடில் ஈடுபட்டதாக நேற்று தான் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை ரிசரவ் வங்கி விதித்தது.

நிதியமைச்சருக்கு கேள்வி
எனவே 9 வங்கிகள் குறித்த தகவலை உண்மை என்று நம்பி பலரும் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இதனால் அந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பலரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டுவிட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

ரிசர்வ் வங்கி மறுப்பு
இதையடுத்து 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. எந்த வங்கியும் மூடப்படாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நிதித்துறை செயலாளர்
நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற குறும்புத்தனமான செய்திகள் உண்மை இல்லை. பொதுத்துறை வங்கிககளில் மூலதனத்தை செலுத்துவதன் மூலம் அவற்றை வலுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

அண்மையில் தான் இணைப்பு
வதந்தியில் சிக்கிய கார்ப்பரேசன் வங்கி ஆந்திரா வங்கி ஆகியவை அண்மையில் தான் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படும் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. இதேபோல் 10 வங்கிகள் 4 முக்கிய வங்கிகளுடன் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications