திடீர் பரபரப்பு.. இந்திய நீர்மூழ்கிக் கப்பலை சிறைபிடித்த பாகிஸ்தான்? உண்மையில் நடந்தது என்ன
டெல்லி: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டுக் கடற்படை தடுத்து நிறுத்தியதாகப் பாகிஸ்தான் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. இருப்பினும், இது பொய்யான தகவல் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
அனைத்து நாடுகளிலும் அந்த நாடுகளைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட தூரம் வரையிலான கடல்பகுதி சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சொந்தமானது ஆகும். இந்த கடல்பகுதிகளுக்குள் முன்கூட்டியே அனுமதி பெறாமல் மற்ற நாடுகள் செல்லக் கூடாது.
அப்படிச் சென்றால் அது சர்வதேச சட்டத்தின் விதிமீறலாகவே கருதப்படும். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடற்பரப்பில் இந்தியக் கப்பல் நுழைய முயன்றதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்
கடந்த அக். 16ஆம் தேதி பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து விமானம் வழக்கம் போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கடற்பகுதியில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைய முயன்றதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற இந்திய ராணுவத்தை பாக். கடற்படை கண்டுபிடித்து, தடுத்து நிறுத்தியது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ரோந்து கப்பல்
மேலும், பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் கடல் எல்லைப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் இந்திய நீர்மூழ்கிக் கப்பலைப் பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து விமானம் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறை என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டிலும், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலைப் பாகிஸ்தான் கடற்படை தடுத்து நிறுத்தியதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

உண்மை என்ன
இந்தச் சூழலில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கடந்த வாரம் எங்கே இருந்தது என்பது குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல் வரை அந்நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லையாகும். இருப்பினும், அந்த குறிப்பிட்ட நாட்களில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இருந்ததாகக் கராச்சி துறைமுகத்தில் இருந்து 150 கடல் மைல் தூரத்தில் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அதேநேரம் இது குறித்து இந்தியா ராணுவம் தரப்பிலேயே இந்தியக் கடற்படை தரப்பிலோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கடல்சார் போக்குவரத்துத் துறை
பாக். ராணுவம் தடுத்ததாகச் சொன்ன நாளில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு வெளியிலேயே அமைந்துள்ளது. இத்தகவலை கடல்சார் போக்குவரத்துத் துறையில் விவரம் அறிந்தவர்கள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர்கள் கூறுகையில், "பாகிஸ்தான் கடல் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தூரம் வரை அந்நாட்டின் கடல் எல்லை உள்ளது.

எங்கே இருந்தது
தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்து 150 கடல் மைல் தூரத்தில் இருக்கிறது. இது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள சர்வதேச கடல் பகுதியாகும்" என்று தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், இந்திய ராணுவத்திடம் இருந்து இது குறித்து எவ்வித விளக்கமும் வரவில்லை என்பதால், இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.











Click it and Unblock the Notifications