படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கிடைத்த 'சூப்பர் சான்ஸ்'
புதுடெல்லி : சிபிஎஸ்சி பொதுத் தேர்வு மற்றும் பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை பிரதமர் மோடிக்கு அருகில் அமர்ந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜனவரி 26 அன்று டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பை பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பை சில மாணவர்கள் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷாக் கையெழுத்திட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் கல்வித்துறை அமைச்சருடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த தகவலை நிஷாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை 600 லிருந்து 401 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள 4 பள்ளிகளை சேர்ந்த 321 மாணவர்கள் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த 80 நாட்டுப்புற கலைஞர்கள் மட்டுமே கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் குடியரசு தின விழாவை நேரலையில் காண மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications