ரூ 2000 நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7 வரை கால அவகாசம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: ரூ 2000 நோட்டுகளை மாற்ற வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை முதல் ரூ 2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரூ 2000 நோட்டுகளை மாற்ற வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை புழக்கத்தில் இருந்த ரூ 3.42 லட்சம் கோடி நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
96 சதவீதம் ரூ 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. ரூ 14 ஆயிரம் மதிப்பிலான ரூ 2000 நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் ரூ 2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு ரூ 2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்திருந்தால் அதை வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவித்தது. தொடர்ந்து இந்த ரூ 2000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டது.
அதில் புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுவிட்டது. அதில் 87 சதவீதம் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன. மீதமுள்ள 13 சதவீதம் வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ளப்பட்டன என தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் ரூ 2000 நோட்டுகள் வாங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக பெட்ரோலிய விற்பனை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த முரளி என்பவர் கூறுகையில் ரூ 2000 நோட்டுகளை மாற்ற 2 நாட்கள் மட்டுமே கால்கெடு உள்ளது. செப்டம்பர் 29, 30 ஆகிய இரு தேதிகளில் மட்டும் ரூ 2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.












Click it and Unblock the Notifications