ரபேல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை.. விரைவில் கையில் எடுக்கும் உச்ச நீதிமன்றம்!
ரபேல் ஒப்பந்த தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மறு சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
டெல்லி: ரபேல் ஒப்பந்த தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மறு சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.
என்ன தீர்ப்பு
ஆனால் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இது மனுதாரர் தரப்பிற்கு பல அதிர்ச்சிகளை அளித்தது. காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய ஏமாற்றம் அளித்தது.
முரணான தகவல்
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சில தவறான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்து இருக்கிறது, நீதிமன்றத்தில் விமான விலை குறித்து பல பொய்களை சொல்லி உள்ளது என்றும் பல விஷயங்கள் வெளியே வந்தது. இது தொடர்பாக செய்திகளில் நிறைய ஆதாரங்கள் வந்தது. அதேபோல் நாடாளுமன்றத்தில் பாஜக பேசியதும், நீதிமன்றத்தில் கொடுத்த தகவலும் முரணாக இருந்தது.
சிஏஜி அறிக்கை
முக்கியமாக, இந்த ஒப்பந்தத்தில் சிஏஜி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாமல் இருப்பதையும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டி இருந்தது. இந்த நிலையில் தற்போது இதை எல்லாம் காரணம் காட்டி தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மீண்டும் விசாரணை
வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் வரிசையாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. நாளை தொடங்கி அடுத்த வாரம் இறுதிக்குள் இந்த வழக்கின் மீதான விசாரணை எப்போது வேண்டுமானாலும் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.