டெல்லி நகருக்குள் பெருக்கெடுத்து ஓடும் யமுனை- வெளிமாநில பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளே நுழைய தடை!
டெல்லி: யமுனை நதியில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ள நீர் டெல்லி மாநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இதனால் டெல்லி மாநகருக்குள் வெளிமாநில பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.
வட இந்திய மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்க்கிறது. இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்கள் பெருவெள்ளத்தில் மிதக்கின்றன. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் அணைகளில் இருந்து நீர் பெருமளவு திறக்கப்படுகிறது. இதனால் யமுனை நதியில் 45 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. யமுனையில் அபாய அளவை தாண்டி 3 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பாய்கிறது. இந்த வெள்ளம் அப்படியே டெல்லி மாநகருக்குள் பல பகுதிகளையும் மூழ்கடித்து வருகிறது.
இதனையடுத்து 16,000க்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஹரியானா, இமாச்சல பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் டெல்லி எல்லைகளான காஷ்மீரி கேட், சிங்கு பார்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் டெல்லி மாநில அரசு அறிவித்திருக்கிறது. கனரக வாகனங்கள் டெல்லி மாநகருக்குள் அனுமதிக்கப்படாது எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் வெள்ளம் மூழ்கடித்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. யமுனை நதியின் நீர்மட்டம் மேலும் 3 அல்லது 4 மீட்டர் உயரும் அபாயம் உள்ளதால் மத்திய நீர்வளத்துறை ஆணையம், மிகவும் ஆபத்தான நிலைமை உருவாகி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களும் டெல்லி வெள்ளம் பாதித்த பகுதிகளில் மூடப்பட்டிருக்கின்றன.
டெல்லி தலைமை செயலகப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. ராஜ்காட்டில் இருந்து டெல்லி தலைமை செயலகம் செல்லும் சாலை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதால் டெல்லியில் குடிநீர் பிரச்சனை ஏற்படும் நிலைமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications