கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி
டெல்லி: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ரோச் இந்தியா நிறுவனத்தின் ஆன்ட்டிபாடி மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மோசமான கொரோனா பாதிப்பு உடைய நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் காசிரிவிமாப் மற்றும் இம்தேவிமாப் (Casirivimab and Imdevimab) என்ற இரு ஆன்ட்டிபாடி காக்டெயில் மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிறுவனம் அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி இந்த இரண்டு மருந்துகளை ரோச் இந்தியா நிறுவனத்தால் இந்தியாவில் இறக்குமதி செய்தி விற்பனை செய்ய முடியும்.
லேசான கொரோனா பாதிப்பு உடைய நோயாளிகளின் சிகிச்சைக்கு இந்த ஆன்ட்டிபாடி காக்டெயில் மருந்துகள் பயன்படுத்தப்படும். இது கொரோனா வைரசின் தீவிர தன்மையைக் குறைக்கும் என்றும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை மோசமாவதைத் தடுக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்புதல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இந்த மருந்து விரைவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டிபாடி காக்டெய்ல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவையாகும்.












Click it and Unblock the Notifications