"ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?" திடீரென டோனை மாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர்! யாரை சொல்கிறார்
டெல்லி: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத் பல்வேறு கருத்துகளைக் கூறினார். குறிப்பாக இந்தியாவுக்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு வேலை செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியாக ஒருவர் எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில கருத்துகளைக் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் அமைப்பு நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டுப் பயணம் இந்தியாவின் மேம்பாட்டிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவை விஸ்வகுருவாக (உலக ஆசிரியர்) மாற்றுவதே ஆர்எஸ்எஸ் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

மோகன் பகவத்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாரதத்திற்காகவே ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது.. ஆர்எஸ்எஸ் செயல்பாடு பாரத தேசத்திற்கானது.. நமது இந்தியாவை ஒரு விஸ்வகுருவாக மாறுவதில்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். உலகிற்கு இந்தியா அளிக்கும் பங்களிப்பை உலக நாடுகள் பார்க்கும் நேரம் வந்துவிட்டது. இது நமது நாடு.. நாம் அதைப் புகழ வேண்டும், உலகிலேயே இந்தியாவை முதலிடத்திற்குக் கொண்டுவரும் பொறுப்பு நமக்குத் தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன். உலக அமைதியில் இந்தியாவிற்கும் ஒரு பங்கு உண்டு.. எந்த ஒரு நாடும் ஒரு தலைவராக மாற வேண்டுமானால்.. உலகிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் விதத்தில் அதன் தலைமை இருக்க வேண்டும்.
நாட்டிற்காகச் சாகத் தயாராக இருக்கணும்
இந்தியாவின் நாகரிக வரலாற்றையும் நாம் புறக்கணிக்க முடியாது. நாம் ஒரு காலத்தில் சுதந்திரமாகவும், முதலிடத்திலும் இருந்தோம். ஆனால், ஒரு சில ஆயிரம் பேர் வந்து நம்மை ஆண்டனர். ஏன் அப்படி நடந்தது? சும்மா வீரர்களுடன் சண்டையிடுவது மட்டும் போதாது. நாட்டிற்காக வாழவும் சாகவுமான தயாராக இருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் நாட்டிற்குத் தேவையானதைக் காங்கிரஸ் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
அனைவரையும் உள்ளடக்கிய தன்மை கொண்டவரே இந்து.. சகமனிதனைக் கண்டு அவனுக்காக யோசிப்பவனே ஒரு இந்து. இந்து என்றால், தன் சொந்தப் பாதையில் நடப்பவர்; மற்றவரின் பாதையில் தலையிடாதவர் என அர்த்தம். ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்தப் பாதையைப் பின்பற்றினாலும், ஒரே இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறவர்கள் இந்துக்கள்.
ஒரே டிஎன்ஏ தான்
நம் அனைவருக்கும் ஒரே டி.என்.ஏ தான். நல்லிணக்கத்துடன் வாழ்வதே நம் கலாச்சாரம். முழு உலகமும் ஒரே தெய்வீகச் சக்தியால் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பழங்காலத்திலிருந்தே உணர்ந்துள்ளோம்.. இந்தியாவின் வளர்ச்சிக்குச் சமூக மாற்றம் முக்கியமானது.. நாட்டை உயர்த்த வேண்டுமானால், அதை யார் மீதும் திணிக்க முடியாது. எல்லோருக்கும் ஒரு பங்கு உண்டு. அரசியல்வாதிகள், அரசுகள் மற்றும் கட்சிகள் என அனைவரும் உதவுகின்றன.. ஆனால் முக்கிய காரணம் சமூக மாற்றம் தான்" என்றார்.
ஒரு தலைவன்
தொடர்ந்து தலைமை குறித்துப் பேசிய அவர், "ஒரு தலைவர் என்பவர் யார் தெரியுமா.. ஒரு தலைவர் எப்போதும் தூய்மையான குணம் கொண்டவராகவும் நாட்டிற்காக வாழ்பவராகவும் இருக்க வேண்டும்.. அவர்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும். அத்தகைய தலைவர்கள் நாட்டிற்காக உழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications