‛‛இது எங்கள் கலாச்சாரம் இல்லை..’’பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற மறுத்த ரஷ்ய அதிபர் புதின்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அவர் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினார். இந்த வேளையில், ‛‛நாளை உங்கள் பிறந்தநாள் என்பது தெரியும்'' எனக்கூறிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறாமல் தவிர்த்தார். மேலும் அதற்கான காரணத்தையும் விளாடிமிர் புதின் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிறந்தநாளாகும். இன்று அவர் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
பாஜக சார்பில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தாளையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், முதல் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

விளாடிமிர் புதினுடன் சந்திப்பு
அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சில விஷயங்களை தெரிவித்தார். இதுதொடர்பாக விளாடிமிர் புதின் கூறியதாவது:

விளாடிமிர் புதின் கூறியது என்ன?
இந்தியாவுக்கு நல்வாழ்த்துக்கள். நாளை நீங்கள் பிறந்தநாள் கொண்டாட உள்ளீர்கள் என்பதை அறிவேன் அன்பு நண்பரே. ஆனால் ரஷ்யாவின் கலாச்சாரப்படி ஒருவரின் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொல்லும் பழக்கம் இல்லை. இதனால் இப்போது பிறந்தநாள் வாழ்த்து கூற முடியாது. ஆனால் உங்களின் பிறந்தநாளை நாங்கள் அறிந்துள்ளோம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்கும், நட்புநாடான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா வளர வாழ்த்துக்கள்'' என கூறியிருந்தார்.

பிரதமர் மோடி கோரிக்கை
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ல் போர் தொடுத்த நிலையில் இருநாட்டு தலைவர்கள் தொலைபேசி வழியாக பேசி வந்தாலும் கூட முதல் முறையாக நேற்று தான் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவும், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பிரதமர் நரேந்திர மோடி, புதினிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ‛‛இது போருக்கான காலம் அல்ல. நான் உங்களிடம் தொலைபேசி அழைப்பின்போது பல முறை இதைப் பேசி இருக்கிறேன். ஜனநாயகம், இருநாட்டு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications