பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின்... நேபாள பிரதமர் ஒலி... பிறந்த நாள் வாழ்த்து!!
டெல்லி: பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் நேபாள பிரதமர் சர்மா ஒலி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது வாழ்த்தில் பிரதமர் மோடி நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புடின் தனது வாழ்த்துச் செய்தியில், ''நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றிகள் கிடக்க வேண்டும். இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து இருக்கும் நட்பை, அன்பை மதிக்கிறேன். என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். மோடி சர்வதேச நாட்டின் கவுரவத்தையும், நண்பர்களிடம் நல்ல உறவையும் வளர்த்துக் கொண்டுள்ளார்.

உங்களது தலைமையின் கீழ் இந்தியா சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் தொடர்ந்து நீடிக்க அந்த நாட்டினர் ஒப்புதல் வழங்கி இருந்தனர். இதன்படி வரும் 2036 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராக புடின் நீடிப்பார். இதையடுத்து அவருக்கு முதன் முதலில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா, சீனா எல்லை சிக்கலிலும் ரஷ்யா தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. மாஸ்கோவில் நடந்த மூன்று நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, முத்தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

நேபாளம் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்து இருக்கும் வாழ்த்து செய்தியில், ''உங்களது 70வது பிறந்த நாளில் அனைத்து ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இந்தியா நேபாளம் இடையே உறவை வலுப்படுத்த பிரதமர் மோடியுடன் நேபாளம் இணைந்து செயல்படும். உங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடரவும், இருதரப்பு மற்றும் சர்வதேச நிகழ்ச்சி விஷயங்களில் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படவும் எப்போது தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications