மனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்!.. யார் இவர்?
டெல்லி: டெல்லியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து ட்விட்டரில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளார் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவ போராளி ஸபூரா ஸர்கர்.
கொரோனா பெருந்தொற்று இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்துவிட்டார். தாய்ப்பால் வாசத்தையே அறியாத அந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பாலை தானமாக அளிக்க பாலூட்டும் ஒரு தாய் தேவைப்படுகிறார், தயவு செய்து உதவுங்கள் என மூத்த பத்திரிகையாளர் மனிஷா மொன்டால் தனது ட்விட்டரில் கேட்டிருந்தார்.

பாராட்டு
இதை பார்த்ததும் நான் இருக்கிறேன் என இளம்தாயான ஸபூரா ஸர்கர் முன்வந்துள்ளார். அந்த குழந்தைக்கு பாலூட்ட நான் தயார் என பதில் ட்வீட் அளித்திருந்தார். ஸபூராவின் இந்த மனிதநேயத்தை ட்விட்டரில் பார்த்த ஏராளமானோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகம்
பலர் நெகிழ்ச்சியில் அற்புதமான மனிதர் நீங்கள் என அவரை பாராட்டியுள்ளார்கள். இவர் யார் என்பதை பார்ப்போம். காஷ்மீரைச் சேர்ந்த ஸபூரா ஸர்கர், ஒரு மாணவ போராளி. இவர் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படிக்கும் மாணவி.

குடியுரிமை திருத்தச் சட்டம்
இவர் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியின் மீடியா ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தவர் இவர். இதன் காரணமாக வயிற்றில் கருவைச் சுமந்தபடி பல மாதங்கள் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருமணம்
இவர் சிறையில் இருந்த போது இவரது திருமணம் குறித்தும், இவரது வயிற்றில் இருந்த சிசு குறித்தும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் வெளிவந்தன. ஆனால் தனது ஒற்றை ட்வீட் மூலம் அனைத்தையும் துவம்சம் செய்து விட்டார் ஸபூரா.












Click it and Unblock the Notifications