வெளிநாடுகளை நம்பாமல்.. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவது தான் பாதுகாப்பானது - சாகர் அதானி
மும்பை: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் உலக எரிபொருள் சந்தைகளில் தொடர்ந்து ஒரு நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. இதற்கு இந்தியாவின் நீண்டகாலத் தீர்வாக, பொருளாதாரத்தை மிக விரைவாக மின்மயமாக்கி, உள்நாட்டிலேயே மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதே சிறந்தது என அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி கூறினார்.

டெல்லியில் உலகளாவிய உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
''ஒரு நாட்டின் பலம் என்பது எனர்ஜி கிடையாது. மாறாக அதன் விலை மற்றும் விநியோகப் பாதுகாப்பு தான். . உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள், கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் இருக்கும் பிரச்சனை, பொருட்களின் விலை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை எப்போது வேண்டுமானாலும் பாதிக்கும் என்பதை சமீபத்திய மோதல் உணர்த்தி உள்ளது.
திடீர் பிரச்சனையை சமாளிக்க...
நாடுகள் வெறும் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், திடீரென உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறனிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கான இலக்குகள், தொழிற்சாலை விரிவாக்கம், உயர்ந்து வரும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு, வரும் பத்தாண்டுகளில் நம்பகமான எனர்ஜி விநியோகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி தேவையாக உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு எனர்ஜி கிடைப்பது என்பது மிக முக்கியம். நீர் சுத்திகரிப்பு, நீரேற்றுதல் போன்றவற்றுக்கும், பாசனம், உர உற்பத்தி, குளிர்பதனக் கிடங்குகள் போன்ற உணவுப் பாதுகாப்புக்கும் தேவையான ஆற்றல் வேண்டும். மேலும் தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் அவசியம்.
மிகப்பெரிய பாய்ச்சல் தேவை
இந்தியர்களின் தனிநபர் எனர்ஜி பயன்பாடு உலக சராசரியை விடக் குறைவு. வருமானம் அதிகரிப்பது, நகரமயமாக்கல் பெருகுவது, தொழிற்சாலைகள் விரிவடைவது போன்றவற்றால் எதிர்காலத்தில் எனர்ஜி தேவை தேவை கணிசமாக உயரும். 2047-க்குள் ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற, மின் உற்பத்தி, சேமிப்பு ஆகியவற்றில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சி பாய்ச்சல் தேவைப்படுகிறது.
அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 2,000 கிகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறன் தேவைப்படலாம். இந்த மின்சாரம் மலிவாகவும், அனைவருக்கும் எளிதாகவும், தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு எதார்த்தமான, சமச்சீர் கொள்கை அணுகுமுறை அவசியம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. அது தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
தன்னிறைவு பெற வேண்டும்
ஆனால், நிலப்பற்றாக்குறை, சீரான விநியோகம் இல்லாதது போன்ற சவால்களால், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மட்டும் முழுமையான தீர்வாக இருக்காது . இதனால் சூரிய சக்தி, காற்றாலை, நீர்மின்சாரம், அனல் மின்சாரம், அணுசக்தி மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் என பலவகைப்பட்ட மின் ஆற்றல் கலவையை இந்தியா பின்பற்ற வேண்டும். போக்குவரத்து, தொழிற்சாலைகள், வீடுகளை மின்மயமாக்குவது, இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து நாட்டின் தன்னிறைவை அதிகரிக்கும்.
மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது, சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் நிலையற்ற தன்மையிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும். இது இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிகவும் அவசியம். உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள், விரைவான அனுமதிகள், மின் பரப்பும் கட்டமைப்பை மேம்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்குத் தொடர்ச்சியான ஆதரவு போன்றவை நீண்டகால முதலீட்டிற்கு வலுவான சூழலை உருவாக்கியுள்ளன. கொள்கைத் தொடர்ச்சியும், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நிர்வாகமும் நாட்டின் பலத்தைக் கட்டமைக்க அவசியமானவை.
மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க..
நாங்கள் தனித்தனி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதை விட, ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, சேமிப்பு, மின் பரப்பல், பசுமை ஹைட்ரஜன், தளவாடங்கள் எனப் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். ஆற்றல் மாற்ற இலக்கை அடைய அதானி குழுமம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள வாய்ப்பின் அளவையும், விரைவான செயல்பாடு அவசியம் என்பதையும் காட்டுகிறது.
இந்தியாவுக்குக் கூடுதல் ஆற்றல் தேவையா என்பதை விட, அதற்கான உள்கட்டமைப்பை எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளதுது. இந்தியா மலிவான, சுத்தமான மின்சாரத்தை வழங்கினால், அது 1.4 பில்லியன் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுடன், உலகப் பொருளாதாரத்திலும் நிலையான பங்கை வகிக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications