இனி ரேசன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விற்பனை - மத்திய அரசு சூப்பர் திட்டம்
: 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
டெல்லி: சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.950 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடு முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து வருகின்றன. சில மாநிலங்களில் அரிசி உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் வரும் 6ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம் தேதியில் இருந்து வழக்கம் போல் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
நடுத்தர ஏழை மக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு சிறிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகளின் மூலம் விற்பனைக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்து உள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கேஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். மேலும் இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும், அதற்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சுதான்ஷூ பாண்டே, நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறினார். நியாய விலைக்கடைகள் மூலம் நிதிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைப் பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி, நியாய விலைக்கடை டீலர்களுக்கு முத்ரா கடன்களை மூலதனப் பெருக்கத்திற்காக நீட்டித்து, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த கூட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள்-யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் லிட்., இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரேஷன் கடைகளின் நிதி நிலைமையை மேம்படுத்த அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்தகட்டமாக சிறிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகளின் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆர்வம் காட்டும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு போதிய உதவிகள் வழங்கப்படும். மேலும் மூலதனப் பெருக்கத்திற்காக ரேஷன் கடை டீலர்களுக்கு முத்ரா கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications