உதயநிதிக்கு அடுத்த சிக்கல்.. சனாதன தர்ம சர்ச்சையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு.. மே19ல் விசாரணை
டெல்லி: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி விசாரணைக்கு வர உள்ள இந்த மனுவால் உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் தனது உரையின் இறுதியில், "மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" எனக் கூறி முடித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உதயநிதி தந்த விளக்கம்
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசும்போது, "மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டேன். இதற்காக என்னை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. எதிர்ப்பிலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புகிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் யாரும் கோவிலுக்கு போகக் கூடாது என அர்த்தம் இல்லை.
கோவிலில் மட்டுமல்ல, சமூகத்திலும் அனைவருக்கும் சமஉரிமை இருக்க வேண்டும் என்று அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதி என மக்களைப் பிரிப்பதைத் தான் நான் ஒழிக்க வேண்டும் என சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கருணாநிதி பேசிய கொள்கையைத் தான் நானும் பேசினேன். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால், சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் கடுமையாக எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவர் சொன்னது தான் எங்கள் வழி" என்று கூறியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
இருப்பினும் உதயநிதி ஸ்டாலினின் கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் அமிதா சச்தேவா தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ''உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் மீண்டும் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார். மக்களைப் பிளவுபடுத்தும் சனாதன தர்மம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் பேசியுள்ளார். 2023 செப்டம்பர் மாதம் சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டும், சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும் என்று பேசியதால் பல புகார்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. நான் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. வெறுப்புப் பேச்சு வழக்குகளில் தாமாக முன்வந்து எஃப்ஐஆர் பதிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியது.
ஆவணமாக பதிவு செய்ய..
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் அவரது பேச்சுக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து இருந்தது. ஆனாலும் அவர் இத்தகைய கருத்துகளை கூறி வருகின்றனர். இது நீதிமன்ற நடவடிக்கையை வேண்டும் என்றே அவமதிப்பதாகும். இதனால் தற்போதைய அவரது பேச்சையும் அவருக்கு எதிரான ஆவணமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்த இந்த வழக்கு மே 19ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications