லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீனா.. வெளியான செயற்கைகோள் படங்கள்
டெல்லி: லடாக்கின் பாங்காங் ஏரியில் சீன பாலம் ஒன்றை கட்டி வருவது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இந்திய சீன ராணுவத்தினர் இடையே லடாக்கில் உள்ள பாங்காங் எல்லை தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது தொடர்ந்து இருதரப்பு ராணுவத்தினரும் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டு மோதும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படை அதிகளவில் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

ராணுவ மோதல்
இராணுவ அதிகாரிகள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இருதரப்பினரும் படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாங்காங் ஏரி கரையில் இரு தரப்புக்கும் சமீபத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலின் முக்கிய மையமாக லடாக்கின் பாங்காங் உள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் இருந்து ராணுவ படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது . மேலும் கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடங்க ராணுவத்தினர் முடிவு செய்தனர்.

சீனா கட்டும் பாலம்
இந்த நிலையில் லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலம் கட்டுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து புவி உளவுத் துறை நிபுணர் டேமியன் சைமன் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில், சீன எல்லைக்குள் வரும் லடாக்கின் பாங்காங் ஏரியின் ஒரு பகுதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஏரியின் இரு கரைகளும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறும் சீனா
இந்த பாலத்தின் மூலம் ராணுவ வீரர்களையும் கனரக ஆயுதங்களையும் சீனா விரைவாக நகர்த்தும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஏரியின் குறுகிய பகுதியில் பாலம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ளதாகவும் காட்டுகிறது. இந்தப் பாலம் முடிவடைந்த பின்னர் சீனா தனது ராணுவ வீரர்களை கூடுதலாக அப்பகுதிக்கு கொண்டு செல்ல பல வழிகளை மேற்கொண்டுள்ளது எனவும், இது இரு தரப்பு ராணுவத்திற்கு இடையே மேலும் மோதலை ஏற்படுத்த வழிவகை செய்யும் எனவும் ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications