சவுதி மன்னர் போட்ட உத்தரவு.. இந்தியா பாகிஸ்தானுக்கு நேரடியாக வந்த அமைச்சர்.. பலே சவுதி அரேபியா
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வந்த போர் நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது அனைவருக்கும் தெரியும். அதேபோல இரு நாடுகள் இடையே பதற்றம் குறைய சவுதி அரேபியா நாட்டின் சார்பிலும் பல தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தாக்குதல் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது. மறுபக்கம் பாகிஸ்தான் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்திய எல்லை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் போரை கைவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைத்தன. இந்நிலையில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா - பாகிஸ்தான் 2 நாடுகளும் போர் நிறுத்த உடன்பாடுக்கு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்பை உறுதி செய்யும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் 2 நாடுகளும் இன்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. மேலும் வருகிற 12 ஆம் தேதி இரு நாட்டு பிரதிநிதிகளிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மட்டுமல்லாமல் சவுதி அரேபியாவும் மத்தியஸ்தம் செய்துள்ளது.
போர் வெடித்துக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அடில் அல் சுபையர் இந்தியா வந்துள்ளார். மேலும் அவர் பாகிஸ்தானுக்கும் சென்றுள்ளார். கடந்த மே 8,9 ஆகிய தேதிகளில் அவர் இந்தியா, பாகிஸ்தான் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த விசிட்டின்போது சவுதி அமைச்சர் அல் சுபையர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார். பிறகு அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி சென்றுள்ளார்.
மேலும் சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் ஆகியோரிடம் தொலைபேசியில் உரையாடி பதற்றத்தை குறைக்க ஆலோசனை வழங்கியுள்ளார். சவுதி மன்னர் அறிவுறுத்தல் படி, தங்களுடைய நட்பு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பதற்றத்தை குறைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுத்ததாக சவுதி அரேபியா தரப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications