கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் நிதி கொடுத்தது யார்.. விவரங்களை தர இயலாது! 4 மாதம் டைம் கேட்ட எஸ்பிஐ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தேர்தல் பத்திரத் திட்டம் சட்டப்பூர்வமானது இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

SBI ask Extend Deadline till June 30 To Give Electoral Bonds Info

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் எந்த கட்சிக்கு நிதியுதவி செய்தார்கள் என்பது குறித்த தகவல்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும் என்று எஸ்பிஐக்கு உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள்: தகவல் அறியும் உரிமையை மீறுவதாகத் தேர்தல் பத்திரங்கள் இருப்பதாகக் கூறி சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்பிற்கு முரணானது, தன்னிச்சையானது என்று இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து கூறியிருந்தார்.

இதன் மூலம் கடந்த 2018இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் இப்போது 2024இல் முடிவுக்கு வந்தது. இத்திட்டத்தை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், "தற்போதைய அமைப்புகளில் அரசியல் கட்சிக்கு வரும் நன்கொடைகள் எங்கிருந்து வருகிறது என்பதே தெரிவதில்லை. எனவே இந்த புதிய முறையைக் கொண்டு வருகிறோம். இதில் 100% வெளிப்படைத்தன்மை இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

பல தரப்பும் வழக்கு: இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே, பல தரப்பினரும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிபிஎம், காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் மற்றும் பல தொண்டு நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தான் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்து இருந்தது.

இந்த தேர்தல் பத்திரங்கள் எஸ்பிஐ மூலமாகவே வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த தேர்தல் பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த தகவலை வரும் மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே வழி இல்லை: ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கி இருந்தது. கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடுவதும், நன்கொடையாளர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க என்று கூறி இத்திட்டத்திற்கு அனுமதி தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர். கறுப்புப் பணத்தை ஒழிக்கத் தேர்தல் பத்திரங்கள் மட்டுமே ஒரே வழி அல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

கால அவகாசம்: மார்ச் 6ஆம் தேதிக்குள் இது குறித்த தகவல்களைத் தர எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் விரைவில் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+