ஜெ. மரணம்: ஒன்லி 4 சாட்சியங்களை தான் விசாரிக்கனும்..சுப்ரீம்கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பரபர தகவல்
டெல்லி: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக இறுதியாக 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது; ஆகையால் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்துக்கு பல முறை கால அவகாச நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை விரைவாக முடிவடையும்; அந்த ஆணையத்தின் அறிக்கை மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து வருகிறது.
Exclusive: வீட்டை தலையில் தூக்கிப் போக முடியுமா... எல்லோரும் வரட்டும் சார்.. கே.ஜெயக்குமார் எம்.பி.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதா சிகிச்சை பெற்று மரணம் அடைந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆஜராக தடை விதிக்கக்கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் இடைக்கால மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தத்தோடு, விசாரணையை வியாழக்கிழமைக்கு வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்..
செப்.23-ல் நிச்சயம் விசாரணை
ஆனால் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் ரஞ்சித்குமார், இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்கபடாமல் நிலுவையில் இருக்கிறது; ஒவ்வொரு முறையும் விசாரிக்காமலேயே ஒத்திவைக்கப்படுகிறது என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள் வரும் 23-ந் தேதி நிச்சயம் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உறுதியளித்தனர்.
நீண்டகால நிலுவையில் மனு
கடந்த 2019ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதா மரணம. தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்தும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைதொடர்ந்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. ஆனால் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது..