சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி: புதிய தொகுதி மறுவரையறை குழு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
டெல்லி: நாட்டின் மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி (SC/ST) சமூகத்தினருக்கான விகிதாசார பிரநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தொகுதி மறுவரையறைக்கான புதிய குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தொகுதி மறுவரையறையின் போது லிம்பு, தமாங் பழங்குடி மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை சிக்கிம், மேற்கு வங்க மாநில சட்டசபைகளில் உறுதி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டசந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது.

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக உரிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கான விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதைக் கவனத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு அல்லது தொகுதி மறுவரையறை செய்வதற்கான புதிய குழு அல்லது ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கலாம். லிம்பு, தமாங் பழங்குடிகளுக்கு மாநில சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்பது அநீதியானது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், 2026-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை தொகுதி மறுசீரமைப்புகான ஆணையத்தை அமைக்க முடியாது என்கிற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் 2026-ல் தொகுதி மறுவரையறை செய்யப்படும் வரை காத்திருந்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 2031-ல்தான் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பது ஏற்புடையது அல்ல எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் லிம்பு, தமாங் பழங்குடிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் மறுப்பது அரசியல் சாசன உரிமையை மறுப்பதாகவும் எனவும் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications