விவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள 1 லட்சம் டிராக்டர்கள் பேரணிக்கு தடை விதிக்க கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெறவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன.
இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வல்லுநர்கள் குழுவையும் அமைத்தது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 4 பேரும் விவசாய சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் என்பதால் இதை விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இந்நிலையில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்துவதாக அறிவித்தனர் விவசாயிகள்.
இதற்காக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் டிராக்டர்களில் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க ஏற்கனவே உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸ்தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் விவசாயிகளின் டெல்லி டிராக்டர் பேரணிக்கு தடை கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச்.
டெல்லிக்குள் யார் நுழைய வேண்டும், நுழைய கூடாது என்பதை டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும்; நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி போப்டே, மத்திய அரசு தமது மனுவை திரும்பப் பெறவும் அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவும் முடியாது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச் திட்டவட்டமாக கூறியது.