16 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு 2-வது பின்னடைவு இது.
Recommended Video
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய சிவசேனா அரசுக்கு எதிராக 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே.
சிவசேனாவின் ஆட்சி, கட்சி, சின்னம் அத்தனையும் அம்போ? 'பாட்ஷா' முகத்தை காட்டப் போகும் உத்தவ் தாக்கரே!
ஜூலை 11 வரை தடை
இதற்கு எதிராக 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ந் தேதி வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தது. அதேநேரத்தில் முந்தைய உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது.
முதல் பின்னடைவு
இதனையடுத்து ஜூன் 30-ந் தேதி சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது சிவசேனா. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது சிவசேனாவுக்கு மிகப் பெரிய பின்னடைவானது.
உத்தவ் ராஜினாமா
இதனையடுத்தே முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனால் பாஜக- அதிருப்தி சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முதல்வராகப் பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வரானார்.
மீண்டும் பின்னடைவு
இந்நிலையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றத்தை சிவசேனா தரப்பு மீண்டும் நாடியது. ஆனால் உச்சநீதிமன்றமோ, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கை உடனே விசாரிக்க முடியாது; ஜூலை 11-ந் தேதியன்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தது. இது சிவசேனாவுக்கு 2-வது பெரிய பின்னடைவு ஆகும்.