எந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் காஷ்மீர் தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்: குலாம்நபி ஆசாத்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகள் வழக்கில் எந்த ஒரு நெருக்கடிக்குள்ளாகாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வரவேற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 370-வது பிரிவை நீக்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல முயன்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குலாம்நபி ஆசாத்தும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்சநீதிமன்றம் அனுமதி
பின்னர் உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஜம்மு காஷ்மீருக்கு சென்று திரும்பினார் குலாம்நபி ஆசாத். இன்று காஷ்மீர் கட்டுப்பாடுகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து குலாம்நபி ஆசாத் கூறியதாவது:

நெருக்கடி இல்லை
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்தையுமே மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது. இம்முறை காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் எவ்வித நெருக்கடிக்குள்ளாகாமல் தீர்ப்பு வழங்கி இருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது..

உச்சநீதிமன்றத்துக்கு நன்றி
ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் முதல் முறையாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

காத்திருந்த தீர்ப்பு
உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இத்தகைய ஒரு தீர்ப்புக்காகத்தான் ஒட்டுமொத்த மக்களும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் காத்திருந்தனர். இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

சுர்ஜிவாலா கருத்து
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தமது ட்விட்டர் பக்கத்தில், இணைய இணைப்பு என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்து மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. இந்த தேசம் அரசியல் சாசனத்துக்குத்தான் தலைவணங்குமே தவிர மோடிக்கு அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications