நீட் தேர்வு: ரத்து செய்யக் கோரிய பொதுநலன் மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம் ரூ5 லட்சம் அபராதம் விதித்தது!
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ல் நடைபெற்றதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரருக்கு அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதினர்.
நீட் நுழைவுத் தேர்வு முடிந்த கையோடு ஏராளமான முறைகேடு புகார்கள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் ரூ35 லட்சத்துக்கு விற்பனையானது; நூதன முறையில் நீட் நுழைவுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது ஆகியவையும் வெளிச்சத்துக்கு வந்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மகாராஷ்டிராவில் நீட் கோச்சிங் மையங்கள் ஆள் மாறாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் தொடர்பான விவகாரத்தில் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இத்தகைய நீட் முறைகேடுகள் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியது. இதனையடுத்து செப்டம்பர் 12-ல் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

பொதுநலன் வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, நீட் தேர்வை மொத்தம் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். இதில் 5 முறைகேடு வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதற்காக எல்லாம் நீட் தேர்வையே ரத்து செய்ய முடியாது என கூறி பொதுநலன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

கண்டனமும் அபராதமும்
மேலும் இத்தகைய பொதுநலன் வழக்கு தொடருவதற்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் மனுதாரருக்கு ரூ5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் மனுதாரர் தரப்பில் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று மனுதாரருக்கு விதித்த அபராதத் தொகையை நீதிபதிகள் ரத்து செய்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் நீட் நுழைவுத் தேர்வை கடுமையாக எதிர்க்கின்றன. இன்று கூட 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கடிதம் அனுப்பி இருந்தார். அதில், தமிழக சட்டசபையில் நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications