சித்திக் கப்பனுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை: உ.பி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை
கொரோனா பாதித்த செய்தியாளர் சித்திக் கப்பனுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி சிறையில் உள்ள செய்தியாளர் சித்திக் கப்பனுக்கு டெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அல்லது டெல்லியில் உள்ள வேறு ஏதேனும் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் கப்பன். கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சித்திக்கை கைது செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற போது சித்திக் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத செயல் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு, தேசவிரோதச் செயல் ஆகிய குற்றச்சாட்டுகளின் சித்திக் மீது சுமத்தப்பட்டன. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மதுராவிற்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் UAPA கீழ் சித்திகை சிறை வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சித்திக்கை விடுதலை செய்யக்கோரி கேரள பத்திரிகையாளர் சங்கம் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தது.
செய்தியாளர் சித்திக்கின் கைதினைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
ஜூலை 31 வரை 'ஸ்டெர்லைட் ஆலை' திறந்திருக்கலாம்.. உச்சநீதிமன்றம் அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்!
இந்நிலையில் சிறையில் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கடந்த 20 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சித்திக்கிற்கு 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பாதித்த சித்திக், மருத்துவமனையில் கட்டிலோடு விலங்குகளைப் போல கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், 4 நாட்களாக கட்டப்பட்ட நிலையில், உணவின்றி, இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவிப்பதாகவும், அவரது நிலை மோசமாக இருப்பதாகவும் சித்திக்கின் மனைவி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். சித்திக் மருத்துவமனையில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக கேரள பத்திரிகையாளர் யூனியனும் குற்றஞ்சாட்டியது.
கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும் முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு சித்திக் சிகிச்சை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் சித்திக் குறித்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஏ.எஸ் போபண்ணா அமர்வு முன் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திக் காப்பானின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீரிழிவு மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சித்திக் தற்போது கொரோனா நோய் தொற்று ஆளாகி மதுரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரபிதேசத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு சிகிச்சைக்காக மாற்ற வேண்டும் என்று சித்திக் கப்பன் மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உத்தரபிரதேச மாநில அரசு மாநிலத்திற்கு வெளியே சித்திக்கை சிகிச்சைக்காக அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மற்ற நோயாளிகள் மதுரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சித்திக் கப்பனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அல்லது டெல்லியில் உள்ள வேறு ஏதேனும் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.