ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி
Recommended Video

டெல்லி: சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னை மாங்காடு அருகே சிறுமி ஹாசினியை பக்கத்து வீட்டில் வசிக்கும் தஷ்வந்த் கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் அவரது தாயை கொன்ற வழக்கில் மும்பை தப்பி சென்ற அவரை போலீஸார் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி கைது செய்தனர். சிறுமி கொலை தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தஷ்வந்தின் தூக்குத் தண்டனையை கடந்த ஜூலை 10-ஆம் தேதி உறுதி செய்தது.
இதையடுத்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரணை நடத்தினார்.
அப்போது தஷ்வந்த் குற்றவாளி என்பதை உச்சநீதிமன்றம் ஏற்பதாக கூறினார். தஷ்வந்துக்கு ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால் நிச்சயம் மனுவை தள்ளுபடி செய்திருப்போம், ஆனால் தூக்குதண்டனை என்ற ஒரே காரணத்துக்காக, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
அரசியல் சாசன பிரிவு 302-ன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரிதானா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்குத் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications