உ.பி. அரசால் சிறை-கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு சிகிச்சை அளிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: உத்தரப்பிரதேச அரசால் சிறையில் அடைக்கப்பட்ட கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு டெல்லி மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசில் பலாத்கார சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பானுக்கு தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உ.பி. பாஜக அரசு அவரை சிறையில் அடைத்தது. மேலும் சித்திக் கப்பான் மீது பல்வேறு வழக்குகளையும் சரமாரியாக போட்டது உ.பி. பாஜக அரசு.
இந்த நிலையில் சிறை கழிப்பறையில் சித்திக் காப்பான் தவறி விழுந்ததால் காயமடைந்த நிலையில் மதுரா சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்திக் காப்பான் சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்பதும் இதன் மூலம் அம்பலமானது.
ஏற்கனவே சித்திக் கப்பானுக்காக கேரளா பத்திரிகையாளர் சங்கம் ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில் அவர் காயமடைந்தார் என்கிற செய்தியைத் தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்க கோரி மற்றொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அல்லது ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சித்திக் கப்பானுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மத்திய பாஜக அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications