கர்னல் சோபியா மீது அவதூறு.. “நாடே வெட்கப்படுகிறது!” பாஜக அமைச்சரை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
டெல்லி: ராணுவ கர்னல் சோபியா மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்ததாக மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
ஆபேரஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்திருந்தார். ஆனால் அவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வலதுசாரி குழுக்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இப்படி இருக்கையில்தான் விஜய் ஷாவின் கருத்தும் வெளிவந்திருந்தது. அவர், சோபியாவின் மதத்தை குறித்து பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. பதிலுக்கு மன்னிப்பு கோரி அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "சோபியா என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். அவரிடம் நான் 100 முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இருப்பினும் அவர் மீது விமர்சனங்கள் குறையவில்லை.
இதனையடுத்துதான் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற அடுத்த 4 மணி நேரத்திற்குள் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் விஜய் ஷா முறையீடு செய்துள்ளார். ஆனால் உச்சநீதிமன்றமும் வழக்குப்பதிவை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், "நீங்கள் எங்கே மன்னிப்பு கேட்டீர்கள்? அது எந்த மாதிரியான மன்னிப்பு? மன்னிப்பு எனில் அதற்கு அர்த்தம் இருக்கிறது. வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் சிலர் மன்னிப்பை கேட்கிறார்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். உங்களுடையது எந்த மாதிரியான மன்னிப்பு? நீங்கள் வெளிப்படுத்தியிருப்பது மோசமான கருத்துக்களாகும். அது முற்றிலும் சிந்தனையின்றி பேசப்பட்டிருக்கிறது.
அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான நீங்கள், ஒரு பொது நபரும் கூட. அப்படி இருக்கையில் பேசும்போது அந்த வார்த்தைகளின் விளைவுகளை தெரிந்து பேச வேண்டும். மக்களின் உணர்வுகள் எவ்வளவு இரக்கமின்றி புண்படுத்தப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். எனவே உங்களின் மன்னிப்பு வீடியோவை நாங்கள் ஏற்க மறுக்கிறோம்.
நீங்கள் பேசிய கருத்துக்களை ஆய்வு செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறோம். ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள். இப்போதைக்கு கைது நடவடிக்கை தேவையில்லை. விசாரணை முடியட்டும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். சிறப்பு குழுவின் அறிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
உங்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் வெட்கப்படுகிறது. இதிலிருந்து எப்படி வெளியே வர முடியும் என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எங்கள் கைகளில் எதுவும் இல்லை" என்று நீதிபதி சூர்யா காந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications