புலம்பெயர் தொழிலாளர் போலி வீடியோ- பாஜக நிர்வாகி உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்கனும்- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி உம்ராவ், நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் மாதம் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக பொய்யான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநில பாஜகவினர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இருந்து இந்த வீடியோக்கள் பகிரப்பட்டன. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பீகார் மாநில சட்டசபையில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பிரச்சனை வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த பீகார் மாநில அரசு, தமிழ்நாட்டுக்கு குழு அனுப்பியது. இதேபோல ஜார்க்கண்ட் மாநில அரசும் தமிழ்நாட்டுக்கு குழு அனுப்பியது. இந்த குழுவினர் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களை சந்தித்து விசாரித்தது. போலி வீடியோக்களில் இடம்பெற்றதை போல தமிழ்நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என சென்னை போலீசார் எச்சரித்தனர். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களான சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்தது.
மேலும் உபி பாஜக செய்தித் தொடர்பாளரான உம்ராவ் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் கோரி உம்ராவ், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றமோ தமிழ்நாடு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் உம்ராவ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன்ஜாமீன் தருவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்த போதும் உம்ராவ் முன்ஜாமீன் பெற்றார்.
முன்ஜாமீன் பெற்ற உம்ராவ், உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், தம் மீதான முதல் தகவல் அறிக்கைகளை எப்.ஐ.ஆர்களை ஒன்றாக ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய உம்ராவ் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் உம்ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை ஏற்று, பகிரங்க மன்னிப்பு கேட்பதாக உம்ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் வரும் திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் உம்ராவ் ஆஜராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications