“ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது”.. தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதிமுறைகளை மதிக்காததால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஆலையை உடனடியாக திறக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்னே பெருமளவு மக்கள் திரண்டு ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர். இதில் வன்முறை வெடித்ததாக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம்" என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
ஆனால், தமிழக அரசு இந்த ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் வந்தது. அப்போது வேதாந்தா தரப்பில், "நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிபுணர் குழுவை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
ஆனால் தமிழக அரசு சார்பில், "ஆலை மாசு ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்கள் கண்டறிந்தன. ஜிப்சம், தாமிரக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தவறான தகவல்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே ஆலையை இயங்க அனுமதிக்க கூடாது" என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், "ஆலை அங்கிருந்து வெளியேறுகிறது என்றால் கழிவுகளை யார் அகற்றுவது? பல்வேறு கடும் நிபந்தனைகள் விதித்து ஆலையை இயக்க அனுமதிக்கலாமே?" என்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, "கழிவுகளை ஆலை நிர்வாகம்தான் அகற்ற வேண்டும். இல்லையெனில் அவர்கள் செலவில் அரசு அகற்றும். ஏற்கனவே விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை. அதை செய்யாத இவர்களுக்கு மறுபடியும் நிபந்தனை விதித்தாலும், பின்பற்றுவார்கள் என எப்படி நம்ப முடியும்?
ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றியுள்ள நிலத்தடி நீரை கடுமையாக மாசடைய வைத்துள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்ற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையிலேயே ஆலை இயங்கக் கூடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது" என்று தெளிவாக எடுத்துரைத்தது.
இதனையடுத்து, "தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications