பீமா கோரேகான் வழக்கு: சுதா பரத்வாஜ் ஜாமீனுக்கு எதிரான என்.ஐ.ஏ. மனுவை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம்கோர்ட்
டெல்லி: பீமா கோரேகான் வழக்கில் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுதா பரத்வாஜூக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி எல்கர் பரிஷத் மாநாடு நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கு அடுத்த நாள் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பீமா கோரேகானில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்றவர்களே காரணம் என கூறியது போலீஸ்.

ஜாமீன் மனு
இதனடிப்படையில் சமூக ஆர்வலர்கள் வரவர ராவ், சுதாபரத்வாஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சுதா பரத்வாஜ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

சுதா பரத்வாஜூக்கு ஜாமீன்
தங்களது மீதான வழக்கை விசாரித்து சிறையில் அடைக்க புனே அமர்வு நீதிமன்ற நீதிபதிகள்தான் உத்தரவிட்டனர். இவர்கள் சிறப்பு நீதிபதிக்கு இணையானவர்கள் கிடையாது. ஆகையால் எங்கள் மீதான குற்றச்சாட்டை ஊபா வழக்கின் கீழானதாக கருத முடியாது என சுதா பரத்வாஜ் தமது மனுவில் கூறியிருந்தார். இதனை ஏற்று மும்பை உயர்நீதிமன்றம் சுதா பரத்வாஜூக்கு ஜாமீன் வழங்கியது.

என்.ஐ.ஏ. மனு தள்ளுபடி
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்தர பட், பேலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, சுதா பரத்வாஜூக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்க்க என்.ஐ.ஏ.வுக்கு முகாந்திரமில்லை என்று கூறி அதன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

பீமா கோரேகான் பின்னணி
கி.பி.1818-ல் மராத்திய பேஷ்வா படையினருக்கும் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி படையினருக்கும் பீமா கோரேகானில் யுத்தம் நடைபெற்றது. கிழக்கிந்திய கம்பெனி படையில் மகர் எனப்படும் தலித்துகள் அதிகம் இருந்தனர். 20,000 பேரை கொண்ட பேஷ்வா படையை தலித்துகள் படையணி வென்றது. இதன் நினைவாக பீமா கோரேகானில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டது. இந்த நினைவுத் தூபியில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications