ED அங்கித் திவாரி மீதான விசாரணைக்கு தடை- தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் யோசனை!
டெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை, மாநில அரசுகள் இடையேயான சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றலாமே என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும் லஞ்சம் வாங்கி சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்குகளை வைத்து ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவர் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி. தற்போது அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கித் திவாரி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இன்று விசாரித்தார். இந்த விசாரணையின் போது, பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் அமலாக்கத்துறை ஒரே மாதிரியாகவா செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் மணல் குவாரிகளிலும் கூட அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது? பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். மேலும் தமிழ்நாட்டை மட்டுமே அமலாக்கத்துறை குறிப்பாக குறி வைக்கிறது எனவும் கபில் சிபல் தமது வாதத்தில் சுட்டிக் காட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமலாக்கத்துறை பழிவாங்கும் வகையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். உள்நோக்கத்துடன் சில வழக்குகளை அமலாக்கத்துறை கையில் எடுக்கிறது எனவும் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் மாநில அரசுகள் இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரச்சனைகள் உருவாகாமல் இருக்க தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம். அத்தகைய சட்டத்தையே இதர மாநில அரசுகளும் கூட பின்பற்றலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் யோசனை தெரிவித்தார். அத்துடன் அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையையும் உச்சநீதிமன்றம் விதித்தது.
மேலும் அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரும் அமலாக்கத்துறை மனு மீது 2 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி விஸ்வநாதன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications