தகுதி நீக்கம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுகவின் கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2017-ல் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கியமான ஓபிஎஸ்
ஆனாலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகினர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஓபிஎஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீக்கம்
இந்த நிலையில் தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். ஆளுநரிடம் மனு கொடுத்ததாலேயே 18 அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் போது அரசுக்கு எதிராக சட்டசபையில் வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கோரிக்கையை முன்வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு
இதனை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் திமுக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் விரைவாக முடிவெடுக்க வேண்டும்; சபாநாயகருக்கு காலக்கெடு எதுவுவும் விதிக்க இயலாது என கூறியது.

உச்சநீதிமன்றத்தில் திமுக
இதன்பின்னர் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக. மேலும் சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியது. இவ்வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

உச்சநீதிமன்றம்
இன்றைய விசாரணையின் போது, ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சட்டசபை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை 4 வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications