பெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!
டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் எனப்படும் உளவு மென்பொருளை இஸ்ரேல் தயாரித்தது. பயங்கரவாதிகளின் செல்போன்களை ஒட்டுக் கேட்க அரசுகளுக்கு இந்த மென்பொருளை இஸ்ரேல் விற்பனை செய்தது.
பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடக அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெகாசஸ் உளவால் பரபரப்பு
உச்சநீதிமன்ற நீதிபதி, பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரது செல்போன்களும் பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதும் அம்பலமானது. பெகாசஸ் மூலம் கர்நாடகா, புதுச்சேரியில் ஆட்சிகளே கவிழ்க்கப்பட்டன என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தரக் கோரி 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முடக்கின.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மேலும் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் 9 பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் முதலில் மத்திய அரசு தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் விவரங்களுடன் விரிவான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Recommended Video

மல்லுக்கட்டிய மத்திய அரசு
ஆனால் மத்திய அரசோ, அப்படி எல்லாம் கூடுதலாக விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது. இது தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஏற்கனவே விளக்கம் தந்துவிட்டார். அதுவே போதுமானது என உச்சநீதிமன்றத்துடன் மல்லுக்கட்டியது. இதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் கடும் அதிருப்தி தெரிவித்தது. பெகாசஸ் விவகாரத்தில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு பகிரங்கமாக வாதிட்டது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. மேலும் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வல்லுநர் குழு அமைத்து விசாரணை
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, பெகாசஸ் உளவு விவகாரத்தில் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க முடிவு செய்திருந்தோம். அந்த வல்லுநர் குழுவில் இடம்பெறக் கூடியவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வரமுடியாமல் போனது. அடுத்த வாரம் வல்லுநர் குழு இறுதி செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங்கிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications