கொரோனாவால் நாடே தத்தளிக்க.. ஒரு 'பக்கா' ஐடியா.. செவி சாய்க்குமா சுப்ரீம் கோர்ட்?
டெல்லி: அட! இது நல்ல ஐடியாவே இருக்கே.. என்பது போல் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது Supreme Court Bar Association of India அமைப்பு.
இந்தியாவில் வீசும் கொரோனா 2ம் அலையில் சிக்கி நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்கள் 'நிலைமை கை மீறிப் போச்சு' என்று கை விரிக்க, மற்ற மாநிலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றன.
மறுபக்கம், 'பிச்சை எடுத்து, திருடியாவது மக்களுக்கு ஆக்சிஜன் கொண்டுச் சேருங்கள்' என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை விளாசிக் கொண்டிருக்கிறது.

உள்ளூர் சிக்கல்கள்
இந்த நிலையில், Supreme Court Bar Association of India அமைப்பு வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தை அணுகி, 'நாட்டில் நிலவும் கடுமையான நோய்த் தொற்று காரணமாக, உள்ளூர் மட்டத்தில் கோவிட் -19 தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க உயர் நீதிமன்றங்கள் அனுமதிக்குமாறு வலியுறுத்தியது. இதன் மூலம், உள்ளூர் மட்டத்தில், கொரோனா தொடர்பான நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திட்டங்கள்
முன்னதாக, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான ஒரு பெஞ்ச் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து அறிந்து வெள்ளிக்கிழமை மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேசிய அளவிலான திட்டங்கள் தேவை என்று நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியிருந்தது.

உடனடி தீர்ப்பு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுகிய Supreme Court Bar Association of India அமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், "நோய்த்தொற்று காலத்தின் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகம் போன்ற உள்ளூர் அளவிலான பிரச்சினைகளை கையாள உயர் நீதிமன்றங்கள் மிகவும் பொருத்தமானவை என்று கூறினார். இதுகுறித்த அவரது மனுவில், "மாநிலங்களின் தலைநகரில் அமைந்துள்ள உயர் நீதிமன்றங்கள், உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து உடனடி அறிக்கைகளைப் பெறுவதற்கும், உள்ளூர் சூழ்நிலையைப் பொறுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்படும் சிரமங்களை உடனடியாக களைவதற்கான வழிமுறைகளையும் உத்தரவுகளையும் பிறப்பிக்க சிறந்த தேர்வாகும். உயர் நீதிமன்றங்கள் தங்கள் மாநில எல்லைக்குள் நிலவும் பிரச்சினைகளை கையாள சிறந்த வழி" என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே வழி இதுதான்
மேலும், "பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது, உயிர்வாழ்வதற்கான பொது மக்களின் அடிப்படைத் தேவைகள், அத்தியாவசியப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையேயான இலவச மற்றும் விரைவான இயக்கம் போன்ற பிரச்சினைகள், லாக்டவுன் காரணமாக வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்க அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் சரியான தீர்வாக இருக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இன்று(ஏப்.23) இந்த மனுவை விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications