பண மோசடி வழக்கு: எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அதிரடி கைது- வலுக்கும் கண்டனங்கள்-தமிழகத்தில் நாளை போராட்டம்!
டெல்லி: எஸ்டிபிஐ (SDPI) எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் தேசியத தலைவர் எம்கே ஃபைஸி டெல்லி விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். எம்கே ஃபைஸி கைது நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
2022-ம் ஆண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டது. அப்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அந்த இயக்கத்தின் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பண மோசடி பிரிவுகளின் கீழ் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீது வழக்குகள் பதிவு செய்தது.

இந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் அமைப்புதான் எஸ்டிபிஐ. இது 2006-ல் தொடங்கப்பட்டது. எஸ்டிபிஐ தேசியத் தலைவர் ஃபைஸி மீதும் அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஃபைஸி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையான ஃபைஸியை அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்தது.
இந்த கைது நடவடிக்கையை எஸ்டிபிஐ கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் எஸ்டிபிஐ விமர்சித்துள்ளது.
ஃபைஸி கைது நடவடிக்கைக்கு. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹைதர் அலி வெளியிட்ட அறிக்கையில், மத்திய பாசிச அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் SDPI கட்சியின் எழுச்சியான போராட்டத்தை தடுக்கும் விதமாக, அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு இத்தகைய கைது நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் இவர் மீது உள்ள விசாரணைக்கு வரும் 10ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், அதற்காக டெல்லி செல்லும் போது விமானத்தில் வைத்து கைது செய்துள்ள பாசிச அரசை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி எஸ்டிபிஐயின் தேசியதலைவர் எம் கே ஃபைஸி அவர்களை டெல்லியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். மத்திய அரசு தனது கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி ஒடுக்கும் செயலை தொடர்ந்து செய்து வருகிறது. வெகு ஜன மக்களுக்குச் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தவறான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற தீய நோக்கத்திற்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. எம் கே ஃபைஸி கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் A.சையது அலி வெளியிட்ட அறிக்கையில், SDPI தேசிய தலைவர் சகோதரர் பைஜி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுபான்மை ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் வாழ்வாதாரங்களை பறிக்க நினைக்கும் பாஸிஸ வாதிகளுக்கு எதிராக மத்திய பாஜகவுக்கு எதிராக சமரசமின்றி போராடும் தலைவர்களை அமலாக்க துறை NIA கருப்புச் சட்டங்கள் போன்ற ஏவல் துறைகளை வைத்து மிரட்டி பார்க்கும் வேலையை தொடர்ந்து மத்திய அரசு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியே சகோதரர் பைஜி அவர்கள் கைது ஆளும்வர்கங்கள் என்ன மனக்கணக்கு போட்டு ஒடுக்க நினைத்தாலும் போராளிகளின் குரல்வளையை நசுக்க முடியாது; பாஸிஸத்திற்கு எதிரான அநீதிக்கு எதிரான எங்கள் குரல் முன்பைவிட வீரியப்படும்; SDPI கட்சியின் தேசிய தலைவர் சகோதரர் பைஜி அவர்களோடு துணை நிற்ப்போம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ தமிழ் மாநில பொதுச்செயலாளர் -M.நிஜாம் முகைதீன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எதிர்குரல்களை ஒடுக்கும் மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (மார்ச்.05) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகள் திரளாக கலந்துகொண்டு, விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயக சக்திகளை மிரட்டி ஒடுக்கும் பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications